Thursday 10 December 2015

ஒழுக்கத்தை உரசிப் பார்க்கும் நடைப் பாதைகள்

ஒழுக்கத்தை உரசிப் பார்க்கும் நடைப் பாதைகள்

sailfish-954060_640 

-இம்தியாஸ் யூசுப் (ஸலபி)-
மக்கள் அன்றாடம் பாதையில், கடை வீதியில் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு ஒன்று கூடுகிறார்கள். பலரும் பல நோக்கங்களுக்காக வருவார்கள். போவார்கள். சிலர் அடுத்தவர்களுடைய வேலைகளில் தலையிட்டு வீண் வம்பை வளர்ப்பார்கள். மற்றும் சிலர் வீண் வேடிக்கைகளில் ஈடுபட்டு வெட்டிப் பேச்சுக்களில் நேரத்தை வீணடிப்பார்கள்.
இன்னும் சிலர் நாட்டின் தலை விதியை மாற்றி நாளைக்கே புதிய அரசை ஆட்சியில் அமர்த்துவது போல் தேசிய பிரச்சினைகளையும் நாடாளுமன்ற விவகாரங்களையும் நடுவீதியில் நின்று கொண்டு வீணே முழங்குவார்கள். வாலிபர்கள் பாதையில் குறுக்காக நின்று கொண்டு போக்குவரத்துக்களை தடைப்பண்ணுவதிலும் பெண்பிள்ளைகள், யுவதிகளைக் கிண்டல் பண்ணுவதிலும், இம்சைப்படுத்துவதிலும், முதியோர்களைப் பரிகாசிப்பதிலும் ஈடுபடுவார்கள்.
நடைபாதை மனிதனது ஒழுக்கத்தையும், உயர்வையும், நேர்மையையும் அத்தோடு அவன் பின்பற்றும் மார்க்கத்தின் சமூகத்தின் நம்பகத் தன்மையையும் உரசிப் பார்க்கும் இடம் என்பதை இவர்கள் உணர்ந்து கொள்ள மறந்து விட்டார்கள். அதனால்தான் விபரீதங்களை விலைக்கு வாங்க முழு ஈடுபாடு கொள்கிறார்கள்?!.
பணிவு, கண்ணியம், முதியோர் சிறுவோர் பலஹீனமானோர் மற்றும் தேவையுடையோருக்கு உதவி புரியும் மனப்பான்மை, நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் சுபாவம் வீண் காரியங்களைக் அனாச்சாரங்களை கண்டு ஒதுங்கிச் செல்லும் பக்குவம் ஆகியன பாதையில் நடந்து செல்பவரிடம் குடிகொள்ள வேண்டிய உயரியப் பண்புகளாகும். இவைதான் நல்லவர்களையும் தீயவர்களையும் பிரித்துக் காட்டும் அளவு கோளாகும். இன்னுமொரு வார்த்தையில் கூறுவதானால் ‘இறை அடியானிடம்’ இருக்க வேண்டிய உயரிய பண்புகளாகும்.
அத்துடன் பாதையில் நடக்கும் போது அதன் வீதி ஒழுங்குகளை கவனித்து பயணிக்க வேண்டும். மக்களுக்கும் வாகனங்களுக்கும் இடையூறு விளைவிக்கக் கூடியதாக பயணிக்கக் கூடாது. அது போல் வீதி சமிஞ்சை விளக்கத்தை பார்த்தும் பாதை சாரிகள் கடவை (மஞ்சல் கடவை) ஊடாக பயணிக்க வேண்டும். தேவையற்ற முறையிலும் ஒழுங்கி வீதிகளுக்கு அப்பாலும் நடக்கும் போதும் வாகனங்களை செலுத்தும் போது மக்கள் அசௌகரியங்களுக்கு ஆளாகுவது போல் சில சமயம் திட்டி சபிக்கவும் செய்வார்கள். அதிலும் குறிப்பாக முஸ்லிம் என்ற அடையாளத்தை கண்டதும் வேண்டுமென்று திட்டவும் முனைவார்கள். இத்தகைய தவறுகள் வேறுபல பிரச்சனைகளுக்கும் காரணமாகிவிடும் வீண் வம்புகளுக்கும் வழியாக அமையும். எனவே பாதையின் ஒழுங்கு விதிகளை சிறுவர்கள் உட்பட பெரியவர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ்வின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள் அறிவிலிகள் (மடையர்கள்) அவர்களுடன் தர்க்கிக்க முற்பட்டால் ஸலாம் கூறி (விலகி) விடுவார்கள். அவர்கள் வீணான காரியத்தின் பக்கம் சென்றுவிட்டால் அதனைத் தவிர்த்து கண்ணியமான முறையில் சென்றுவிடுவார்கள். (25:63)
இன்று வீதியோரங்களில் சூதாட்டம், ஜெக்போர்ட், கெஸினோ, ரேஸ் புக்கி, மதுபானசாலைகள், பாபுல் பீடா, பான்பராக் தட்டுக்கள், விபச்சார விடுதிகள், போன்றன புதுப் பொலிவுடன் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
பல மதங்கள் இருக்கக் கூடிய இந்நாட்டில் இவ்வாறான பாவங்கள், அசிங்கங்கள், பரவிக் கொண்டிருப்பது கவலைக்குரிய விடயங்களாகும். இவைகளினால் வளரும் இளம் சமூகம் அழிந்து கொண்டிருக்கிறது. தனிமனித, குடும்ப, சமூக வாழ்வு சிதறடிக்கப்படுகிறது.
அவற்றுக்கெதிராக பிரச்சாரம் செய்ய வேண்டிய கடமைப்பாடு அவர்களுக்கு உண்டு. முஸ்லிம்களும் அவர்கள் வாழக்கூடிய வீதிகளில் அல்லது பகுதிகளில் இவ்வாறான காரியங்கள் பரவாது சமூகத்தை விழிப்படையச் செய்யவேண்டும்.
‘நீங்கள் வீதிகளில் அமர்வதை எச்சரிக்கிறேன்’என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அங்கு அமர்ந்து உரையாடுவதற்கு எங்கள் மஜ்லிஸ் (சபை) இருக்கிறதே என்று சஹாபாக்கள் கேட்டார்கள். அப்படியாயின் நீங்கள் உங்கள் சபைக்கு வரும் பொது பாதைக்கு அதற்குரிய உரிமையைக் கொடுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள்.
பாதைக்குக் கொடுக்கக்ககூடிய உரிமை என்ன? அல்லாஹ்வின் தூதரே! எனறு சஹாபாக்கள் கேட்டார்கள். பார்வையைத் தாழ்த்திக் கொள்ளல், தீங்கு தருபவற்றை அகற்றுதல், ஸலாத்திற்கு பதிலளித்தல், நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் ஆகிய காரியங்களைச் செய்வதே பாதைக்குக் கொடுக்கக்ககூடிய உரிமைகள் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி), நூல்: புகாரி

பாதையில் முஸ்லிம்கள் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் இப்பணியை செய்தாக வேண்டும். முடியாது விட்டால் உடனே அங்கிருந்து அகன்றுவிட வேண்டும். ஒவ்வொரு முஸ்லிமும் இந்த நபிமொழியில் கூறப்பட்டுள்ள உரிமைகளைச் சரிவர புரிந்து கொண்டு தன் கடமையைச் செய்ய முன் வந்திருந்தால் எல்லா ஃபித்னாவுக்கும் புகழிடமாக உறுமாறிக் கொண்டிருக்கும் வீதியோரங்கள் நல்ல காரியங்களின் முகவர் நிலையங்களாக தோற்றம் பெற்றிருக்கும். இனிமேலாவது இக்காரியங்களை உருப்படியாகச் செய்ய முன்வருவார்களா?
Nandri-Islamkalvi.com

 

மனைவியின் சுயமரியாதையைப் பாதுகாத்தல் கணவனின் கடமை



மனைவியின் சுயமரியாதையைப் பாதுகாத்தல் கணவனின் கடமை

marriage-168831_640
-இம்தியாஸ் யூசுப் (ஸலபி)-
அன்பால் பிணைந்த உள்ளங்களில் சில போது சிக்கல்களும் பிரச்சினைகளும் எழுவதுண்டு. இருவருக்கிடையில் முரண்பாடுகள் தோன்றும் போது அறிய வேண்டிய பல பண்புகள் தோற்றம் பெறும். அறியாத சில விடயங்களும் வெளிச்சத்திற்கு வரும். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள இந்த நிலை துணை செய்யும். எந்த நேரத்தில் எப்படிப் பேச வேண்டும், எப்படி அணுக வேண்டும், எப்படி சமாளிக்க வேண்டும் என்ற அனுபவம் கிடைத்து விடும்.
இந்த அனுபவங்கள் கணவன் மனைவிக்கிடையில் சிறந்த உறவை கட்டியெழுப்பும். எனவே பிரச்சினைகள் வரக் கூடாது என்று எதிர்பார்ப்பதை விட வந்த பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்பது தான் முக்கியம்.
தன் வீட்டில் இருந்தாலும் பிற வீட்டில் இருந்தாலும் ஒருவர் மற்றவருடன் புரிந்துணர்வுடன் நடந்து கொள்ள பிரச்சினைகள் வழிகாட்டியாக இருக்கும். ஆனால், வாழ்க்கையையே பிரச்சினையாக்கி விடக்கூடாது.
30 வருடம் இந்த ஆளுடன் வாழ்ந்தும் என்ன சொல்கிறார் என்று தெரியவில்லை என்று அலட்டிக் கொள்ளும் சில பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். காரணம் இவர்களுடைய வாழ்க்கையே 30 வருடங்களாக பிரச்சினையோடுதான் கழிந்திருக்கிறது. இவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள ஒருபோதும் முனைந்ததில்லை.
ஒவ்வொருவருடைய பார்வைக்கும் ஒரு அர்த்தமுண்டு. கணவன் மனைவியின் பார்வைக்கும் அர்த்தமுண்டு. கணவன் மனைவியை பார்த்தால் என்ன காரணத்திற்காக பார்க்கிறார், அதன் அர்த்தம் என்ன என்று மனைவிக்கு தெரிந்திருக்க வேண்டும். அது போல் மனைவி கணவனைப் பார்த்தால் அந்தப் பார்வையின் அர்த்தம் என்ன என்பதை கணவன் புரிந்துகொள்ள வேண்டும். பார்க்கும் போது சுதாகரித்துக் கொள்ளும் பக்குவத்தை பெறும் போதே வாழ்வு நிம்மதி பெறும்.
நபி(ஸல்) அவர்கள் மரணிக்கின்ற சந்தர்ப்பத்தில் ஆயிஷா(ரலி) அவர்களின் அரவணைப்பில் இருந்தார்கள். அப்போது அவர்களுடைய சகோதரன் அப்துர் ரஹ்மான் உள்ளே நுழைந்தார். அவர் மிஸ்வாக் குச்சியினால் பல்துலக்கிக் கொண்டிருந்தார். நபி(ஸல்) அவர்கள் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பல் துலக்குவதற்கு என் கணவர் விரும்புகிறார் என்பதை புரிந்து கொண்ட ஆயிஷா(ரலி) அவர்கள் தன்னுடைய சகோதரனிடமிருந்து அந்த மிஸ்வாக் குச்சியை கேட்டெடுத்து அதன் அடுத்த பக்கத்தை மென்மையாக கடித்து விட்டு நபியிடம் கொடுத்தார்கள். நபிகளார் அதனால் மிஸ்வாக் செய்தார்கள். கடைசி நேரத்திலும் என் எச்சில் என கணவனின் எச்சிலுடன் சேர்ந்துக் கொண்டது என ஆயிஷா (ரலி) அவர்கள் பிரமிதம் கொண்டார்கள்.
பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொள்ளும் பக்குவம் என்பது இது தான். சிலர் பார்வையால் தங்கள் தவறுகளை திருத்திக் கொள்வார்கள். மற்றும் சிலர் வார்த்தைகளால் திருந்திக் கொள்ள முனைவார்கள்.
வார்த்தைகளை வெளியிடும்போது பண்பாடும் நாகரிகமும் இருக்க வேண்டும். அசிங்கமும் அருவருப்பு தென்படக் கூடாது. மனைவியின் மானத்தையும் மரியாதையையும் கௌரவத்தையும் பாதுகாக்க வேண்டும். பேச்சில் நிதானம் தவறும்போது கட்டுப்படுத்த முடியாத வார்த்தைகள் வந்துகொண்டே இருக்கும். பிரச்சினைகள் முற்றிவிட இதுவே காரணமாகி விடும். கணவனின் பேச்சில் பொறுமை இழந்த மனைவி, தானும் தன் விருப்பப்படி பேசத் துவங்குவாள். சாதாரணமாக பேசி முடிக்க வேண்டி ஒரு சின்னப் பிரச்சினை வெறுப்புக்கும் மனக் கசப்புக்கும் வழிவகுத்து விடும். அதன் உச்ச கட்டமாக கணவன் மனைவியின் நடத்தைப் பற்றியும் அவளது குடும்பத்தைப் பற்றியும் பரம்பரை பற்றியும் பேசத் துவங்குவான். தப்பு தப்பாக மனைவியைப் பற்றிக் கதைக்கும்போது அவள் தலை குனிந்து போவாள். அவளுடைய மானத்தை ஏலம் போடுவதற்கு இஸ்லாம் ஒருபோதும் கணவனுக்கு அனுமதி வழங்கவில்லை.
அதுபோல் மனைவியை கண்டப்படி அடிப்பதற்கும் அனுமதி வழங்கவில்லை. காயப்படுத்தாத முறையிலும் பாதிப்பு ஏற்படுத்தாத முறையிலும் இலேசாக அடிப்பது என்ற வார்த்தையே கையாளப்படுகிறது என்பதை கவனிக்க வேண்டும். அவளது சுயமரியாதையை கலங்கப்படுத்தாத வகையிலும் பெண்மையை காயப்படுத்தாத வகையிலும் இலேசாக அடிக்க வேண்டுமே தவிர அத்து மீறுவதாகவோ எல்லை மீறுவதாகவோ இருந்து விடக் கூடாது. மிருகத்தனமாக நடந்து கொள்வதாகவும் அமைந்து விடக் கூடாது. மனைவியை பழிவாங்குவதாகவோ அல்லது கணவனின் மீது வெறுப்பை ஏற்படுத்துவதாகவோ அமைந்து விடவும் கூடாது.
திருந்தி வாழ்வதற்கான வழியை காண்பதாகவே இருத்தல் வேண்டுமே தவிர தன் வலிமையை காண்பிப்பதாகவோ வன்முறையை தூண்டுவதாகவோ இருந்து விடவும் கூடாது. மனைவி மார்க்கத்தின் எல்லையை தாண்டும்போதே அடிப்பது என்ற நிலைக்கு வர வேண்டுமே தவிர தன்னுடைய சுய நோக்கங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதற்காக அடிக்க முனையக் கூடாது.
குறிப்பாக மனைவியின் முகத்தில் அறையவே கூடாது. மேனியில் எந்த காயமும் கீறலும் வந்து விடக் கூடாது. மனைவிக்கு அடிப்பது என்பது முதல் தீர்வல்ல. முதலில் அவள் குறையை எடுத்துக் கூறி உபதேசம் செய்ய வேண்டும். அது பயனளிக்காவிட்டால் அவளை படுக்கையிலிருந்து ஒதுக்கி வைத்து திருத்த வேண்டும். அறிவு ரீதியான உளவியல் ரீதியான இத்தீர்வு பயனளிக்காவிட்டால் தான் இலேசாக அடித்து, சேர்ந்து வாழ்வதற்கான கடைசி சந்தர்ப்பம் இது என்பதை புரிய வைக்க வேண்டும். இதுவும் பயனளிக்காவிட்டால் மண முறிவுக்கான வழி பிறக்கும் என்பதை எடுத்து கூற வேண்டும் இந்த ஒழுங்கு விதியை குர்ஆனும் ஹதீஸும் எமக்கு எடுத்துச் சொல்கிறது. மனைவியை அடிக்காமலும் அவளை வெறுத்து ஒதுங்கிக் கொள்ளவும் கணவனுக்கு அனுமதியுண்டு என்பதையும் இங்கே புரிந்துகொள்ள வேண்டும்.
பிரச்சினையின் தன்மையை குறைக்கவும் விவாகரத்தை தடுக்கவும் கணவனின் வீட்டாரையும் மனைவியின் வீட்டாரையும் அழைத்து சமரச முடிவை காணவும் இஸ்லாம் சந்தர்ப்பம் வழங்கியுள்ளது அத்தனையும் பயனற்றுப் போகும் போதே விவாகரத்துக்கான வழியை கைக்கொள்ள வழிகாட்டுகிறது.
உன் மனைவியின் முகத்தில் அடிக்காதே, அவளிடம் இழிவாகப் பேசாதீர். வீட்டிலேயே தவிர வெளியில் அவளைக் கண்டிக்காதீர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: முஆவியா இப்னு ஹைதா (ரழி), நூல்: அபூதாவூத்)
நபி(ஸல்) அவர்கள் தங்கள் மனைவியரை ஒரு போதும் அடித்தது இல்லை முறைகேடாக பேசியதில்லை நடாத்தியதில்லை.
எந்தவொரு பிரச்சினையையும் நாலு பேருக்குத் தெரியாமல் தன்னுடைய அறையில் பேசித் தீர்க்க வேண்டும். வெளியில் பேசும்போது கண்ட கண்ட இடங்களில் முரண்படும்போது சண்டைப் பிடிக்கும்போது இருவருடைய மானமும் மரியாதையும் நாசப்பட்டு விடும்.
சுயமரியாதையைப் பாதுகாக்க வேண்டுமானால் வீட்டினுள்ளேயே தன்னுடைய அறையிலேயே முடித்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் இருவருக்கிடையில் அன்பும் பிணைப்பும் மேலோங்கி வளர்வதுடன் புரிந்துணர்வும் ஒத்துணர்வும் சிறப்பாகக் காணப்படும்.
Nandri-Islamkalvi.com

Tuesday 17 November 2015

மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள் (Part-1)

இம்தியாஸ் யூசுப் ஸலபி-
நரகத்திலிருந்து பாதுகாத்தல்
கடைசி வரைக்கும் கண்கலங்காமல் காப்பாற்றுவேன் என்ற உறுதிமொழியுடன் தான் ஒவ்வொரு கணவனும் மனைவியை கைப்பிடிக்கின்றார். மனைவியின் மீது அன்பு, பாசம் வைத்து சந்தோசமாக வாழ்வதற்கு அனைத்து வழிகளையும் கடைப்பிடிக்கின்றார்கள். மனைவியின் கண்ணில் தூசு விழுவதையும் பொறுத்துக் கொள்வதில்லை. மனைவி நோயினால் அவஸ்தைப்படுவதையோ அல்லது வேறு காரணங்களால் துன்பப்படுவதையோ விரும்புவதில்லை. மனைவிக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராகுகின்றார்.
மனைவி சுகயீனமுற்றால் குணப் படுத்துவதற்காக பெரும் சிரமப்படுகின்றார். அதற்காக எவ்வளவு பணம் செலவழிப்பதற்கும் தயாராகுகின்றார். சிலநேரம் சொத்துக்களை விற்றாவது காப்பாற்ற முனைகின்றார்.
உலகின் எல்லா தொல்லைகளிலிருந்தும் காப்பாற்ற நினைக்கும் கணவன், தன் அன்புக்குரிய மனைவியை நரகத்திலிருந்து காப்பாற்றவும் தன்னாலான அனைத்து வழிகளையும் மேற் கொள்ள வேண்டும். இதுதான் உண்மையான கணவனின் அன்பும் பொறுப்புமாகும்.
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நரகத்தையும் விட்டு பாதுகாத்துக் கொள்ளுங்கள். மனிதர்களும் கற்களுமே அதன் எரிபொருட்களாகும். அதன் மீது கடின சித்தம் கொண்ட பலசாலிகளான வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ் தமக்கு ஏவியதற்கு மாறுசெய்ய மாட்டார்கள். மேலும் அவர்கள் தமக்கு ஏவப்பட்டதைச் செய்வர்கள். (66:6)
அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏவிய கட்டளைகளுக்கு முற்றிலும் அடிபணியக் கூடியவளாக மனைவியை மாற்றுவது கணவனின் கடமையாகும். முஸ்லிமான முஃமினான, சாலிஹான பெண்ணாக மனைவி அமையும்போதே குடும்ப வாழ்வு அருளுக்குரியதாக மாறிவிடும்.
குடும்ப வாழ்வில் மனைவி சில தவறுகளை விடும்போது அல்லது கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் சில குறைகளை விடும் போது கணவன் கோபப்படுவதை விட அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் செய்ய வேண்டிய கடமைகளில் தவற விடும்போதே கோபப்பட வேண்டும். காரணம் மறுமை வாழ்வில் மனைவியுடன் வாழ்வு மற்றும் பொறுப்புப் பற்றி கணவன் விசாரிக்கப்பட இருக்கிறார்.
கணவன் தன் குடும்பத்தின் மேய்ப்பாளராவார். அவரது மேய்ப்புப் பற்றி (பொறுப்பு) குறித்து விசாரிக்கப்படுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: புகாரி.
குடும்ப வாழ்வில் கணவனின் கடமையும் பொறுப்பும் இந்த உலகத்துடன் முடிவடைவதல்ல. அது குறித்த விசாரணை மறுமையுடன் முடிவடை கின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே கணவன் இபாதத்களில் கவனம் செலுத்துவதுடன் மனைவியையும் இபாதத்களில் ஈடுபடுத்த வேண்டும்.
நபியே! உமது குடும்பத்தாருக்கு தொழுகையைக் கொண்டு ஏவி, நீர் அதில் பொறுமையாகவும் இருப்பீராக. (20:132)
தொழுவது முதல் அனைத்து இபாதத்களிலும் கணவன் முன்மாதிரியாக இருந்து, மனைவியை வழி நடாத்த வேண்டும். இபாதத்களில் முதன்மையாக இருப்பது தொழுகையாகும். மனைவியுடனான தொடர்பும் இந்த வணக்கத்தின் மூலமே வலுப்படுத்த வேண்டும்.
மனைவி இஸ்லாத்தின் வரம்பை மீறும்போது கணவன் எந்தச் சந்தர்ப்பத்திலும் அதற்கு இடம்கொடுக்கக் கூடாது. அல்லாஹ்வுக்கு மாறு செய்து மனைவியை திருப்திப்படுத்துவதை விட மனைவியுடன் கோபப்பட்டு அல்லாஹ்வை திருப்திப்படுத்த வேண்டும்.
குடும்ப வாழ்வில் ஏற்படும் தகராறுகள் பிரச்சினைகள் காரணமாக (அற்பமான காரியங்களுக்காக) மனைவியை விவகாரத்துச் செய்வதை விட அல்லாஹ் ரஸூலுக்கு மாற்றமாக நடக்கும் போதே விவாகரத்து குறித்து முடிவுக்கு வர வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் மனைவியை நரகத்தை விட்டும் காப்பாற்றிக் கொள்ள வழி பிறக்கும்.
மனைவிக்காக செலவு செய்தல் மனைவிக்கு உணவு கொடுப்பது, உடை கொடுப்பது, உறையுள் கொடுப்பது, போஷிப்பது உட்பட இஸ்லாம் ஆகுமாக்கியிருக்கின்ற அனைத்து செலவுகளும் கணவனுக்குரிய பொறுப்பாகும். இந்த பொறுப்பிலிருந்து கணவன் ஒருபோதும் ஒதுங்கிவிட முடியாது.
பெண்களை நிர்வகிக்க ஆண்கள் தகுதியுடையோராவர். அவர்களில் சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும் (ஆண்களாகிய) அவர்கள் தமது செல்வங்களிலிருந்து செலவழிப்பதாலும் ஆகும். (4:34)
இறுதிய ஹஜ்ஜின்போது நான் நபி (ஸல்) அவர்களின் உரையைக் கேட்டேன். அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்து உபதேசம் செய்தார்கள். அப்போது அறிந்து கொள்ளுங்கள். மனைவியரிடம் சிறந்த முறையில் நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அவர்கள் உங்களிடம் கட்டுப்பட்டு உள்ளவர்களாவர். அது அல்லாத எதையும் நீங்கள் அவர்களிடமிருந்து சொந்தமாக்கிக் கொள்ளாதீர்கள். எனினும் அவர்கள் தெளிவான மானக்கேடான காரியத்தைச் செய்தாலே தவிர.
அவர்கள் பாவம் செய்தால் அவர்களை படுக்கையிலிருந்தும் ஒதுக்கி விடுங்கள். கடுமையாக இல்லாமல் லேசாக அடியுங்கள். (அதன் மூலம் அவர்கள்) உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்.
அறிந்து கொள்ளுங்கள். உங்கள் மனைவியரிடம் உங்களுக்கு உரிமை உண்டு, அவர்களிடம் உங்களை உரிமை என்பது, உங்கள் விரிப்பில் நீங்கள் விரும்பாதவர்களை உட்காராமலிருக்கச் செய்வதும் உங்கள் வீடுகளில் நீங்கள் விரும்பாதவர்களை அனுமதிக்காமல் இருப்பதும் ஆகும்.
அறிந்துகொள்ளுங்கள். உங்களிடம் அவர்களுக்குரிய உரிமைகள் என்பது அவர்களுக்கு உடையும் உணவும் தருவதும் நல்ல முறையில் நடந்து கொள்வதுமாகும் எனக் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அம்ர் (ரழி), நூல்: திர்மிதி)
அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவரிடம் அவரது மனைவியின் உரிமைகள் என்ன? என்று கேட்டேன். அப்போது நபியவர்கள் நீர் சாப்பிடும் போது அவளையும் நீர் சாப்பிடச் செய்ய வேண்டும். நீர் ஆடை அணியும்போது அவளுக்கு அணியச் செய்ய வேண் டும்… என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: முஆவியா இப்னு ஹைதா (ரழி), நூல்: அபூதாவூத்)
கணவனுக்குரிய கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து இந்த ஹதீஸ் களில் நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். மனைவியுடன் கணவன் நடந்துகொள்ளும் ஒழுங்கு முறைகளையும் விளக்கப்படுத்துகிறார்கள்.
மனைவி ஏழையாகவோ பணக்காரியாகவோ இருந்தாலும் செலவழிப்பது கணவனின் கடமையாகும். மனைவியிடம் செல்வம் இருக்கின்றது. அவளது செலவுகளை அவளது செல்வத்திலிருந்து பார்த்துக் கொள்ளட்டும் என கணவன் சொல்ல முடியாது. அல்லது மனைவி சம்பாதிக்கின்றாள், அவளது சம்பாத்தியத்திலிருந்து அவளது செலவுகளை கவனித்துக் கொள்ளட்டும் என்றும் சொல்ல முடியாது.
கணவன் தன்னுடைய நண்பர்களுடன் வெளியில் சுற்றி வயிறாற உண்டுவிட்டு, மனைவியை பட்டினியில் போடக் கூடாது. தனக்கென புத்தாடையொன்றை வாங்கி விட்டு மனைவிக்குக் கொடுக்காது விட்டு விடக் கூடாது. தன்னுடைய சுய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதுபோல் மனைவியின் தேவைகளையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சினைகள் ஏற்பட்டு விவாகரத்தில் முடிவு காண முனைந்து, மனைவி தலாக்கிற்கான இத்தாவில் இருக்கும்போது கூட மனைவிக்கான அத்தனை செலவுகளையும் பொறுப்பேற்க கணவன் கடமைப்பட்டுள்ளான். போதுமான செலவுகளை கணவன் தராது விட்டால் அவனது பணத்திலிருந்து அவனுக்கு தெரியாமல் போதுமான அளவு பணத்தை எடுத்துக் கொள்வதற்கு மனைவிக்கு தடையேதுமில்லை. இவ்வாறான அனுமதியை ஹின்தா(ரலி) அவர் களுக்கு நபியவர்கள் வழங்கினார்கள்.
மனைவி இத்தாவுடைய காலத்தில் சுகவீனமுற்றாலும் அவளுக்குரிய மருத்துவ வசதியை செய்துகொடுப்பதும், பெருநாள் தினத்தை அடைந்தால் பெருநாளுக்குரிய செலவுகளை பொறுப்பேற்பதும் கணவனின் கடமையாகும்.
மணம் முடித்து மனைவியை தீண்டுவதற்கு முன் அவளை விவாகரத்துச் செய்தாலோ அல்லது மஹரை நிர்ணயம் செய்யாமல் மணம் முடித்து விவாகரத்து செய்தாலோ அப்போது கணவன் தனது வசதிக்கும் சக்திக்கும் ஏற்ப மனைவிக்கு ஏதேனும் வசதியை அளிப்பதும் கடமையாகும். (பார்க்க: அல்குர்ஆன் 2:236)
மஹரை நிர்ணயம் செய்து மனைவியை தீண்டுவதற்கு முன் விவாகரத்துச் செய்தால் நிர்ணயித்த மஹரில் அரைவாசியை மனைவிக்குக் கொடுப்பதும் கணவனின் பொறுப்பாகும். (பார்க்க 2:237)
மனைவியை தலாக் கூறிய சந்தர்ப் பத்தில் பால் குடிக்கும் பருவத்தில் குழந்தை இருந்தால் அக்குழந்தைக்கு பாலூட்டும் தாய்க்கும் உணவளிப்பதும் உடையளிப்பதும் கணவனின் கடமையாகும். அக்குழந்தையின் பராமரிப்புக்கான முழுமையான செலவுகளும் கணவனையே சாரும். (பார்க்க 2:233)
வசதி உள்ளவர் (கணவர்) தமது வசதிக்கு ஏற்ப செலவிடப்பட்டும் யாருக்கு வாழ்வாதாரம் அளவோடு வழங்கப்பட்டுள்ளதோ அவர் அல்லாஹ் தனக்கு வழங்கியவற்றிலிருந்து செலவிடட்டும். அல்லாஹ், தான் வழங்கியதற்கு மேல் எந்தவோர் ஆத்மாவையும் சிரமப்படுத்த மாட்டான். அல்லாஹ் கஷ்டத்திற்குப் பின் இலகுவை விரைவில் ஏற்படுத்துவான். (65:3)
கணவனின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டே செலவுகளை மனைவியும் பெற வேண்டும். கணவனை கஷ்டத்திற்குள்ளாக்கி செலவுகளை கோரக் கூடாது.
பொதுவாக மனைவி இத்தாவுடைய காலத்தில் இருக்கும்போதும் தலாக்கிற்குப் பின் குழந்தைக்கு பாலூட்டும் போதும் அதற்குரிய செலவுகளை கணவன் பொறுப்பேற்காமல் மனைவியையும் குழந்தையையும் விட்டு விட்டு செல்கிறான். அல்லது தலை மறைவாகின்றான். இத்தாவுடைய காலத்தில் பெற்றோர் தனது மகளை தங்களது வீட்டுக்கு அழைத்து செல்வதால் கணவனது செலவுகளை பெற்றுக் கொள்வதில்லை. கணவனும் கொடுப்பதில்லை. இது பெரும் தவறாகும். இந்தத் தவறை பெற்றோர் செய்யக் கூடாது. கணவன் எச்சந்தர்ப்பத்திலும் மனைவிக்குரிய இக்கடமையை செய்ய பின்நிற்கவும் கூடாது.

Nandri: Published on Islamkalvi.com