Monday 11 April 2022

ஜகாத் குறித்த சந்தேகங்களும்! விளக்கங்களும்!!

 ஜகாத் குறித்த சந்தேகங்களும்! விளக்கங்களும்!!


யார் மீது கடமை?


ஒரு மனிதரிடம் 85 கிராம் நகையோ அல்லது அதற்கு நிகரான (ஜகாத் கடமையுள்ள சொத்து அல்லது) பணமோ இருந்தால் அவர் ஜகாத் கொடுக்க வேண்டும்.


*மனைவி இடத்தில் உள்ள நகைகளுக்கு கணவன் கொடுக்க வேண்டுமா?*


அவ்வாறில்லை. யார் சொத்துக்கு உரிமையாளரோ, அவர் மீது ஜகாத் கடமை. அவர் சார்பாக கணவனோ அல்லது மற்றவரோ ஒப்புதலோடு கொடுப்பது குற்றமில்லை. 


*கடன் இருந்தால் கொடுக்க வேண்டுமா?* 


சொத்து மதிப்பில், வர வேண்டியவைகளை சேர்த்துவிட்டு, கடனை கழித்துவிட்டு மீதமுள்ள தொகை 85 கிராம் அல்லது அதற்கு நிகரான தொகை இருந்தால் கொடுக்க வேண்டும். 


*எவ்வளவு கொடுக்க வேண்டும்?*


சொத்துக்கள்*, தங்கம், ஆபரண கற்கள், வங்கியிலுள்ள சேமிப்பு, கையிருப்பு பணம் போன்றவைகளுக்கு இரண்டரை சதவிகிதம் கொடுக்க வேண்டும். 


(40 கிராம் தங்கம் இருந்தால் ஒரு கிராம் கொடுக்க வேண்டும் அல்லது அதற்கு நிகரான பணத்தை கொடுக்க வேண்டும். 100 கிராம் இருந்தால், மொத்தமாக 100 கிராமுக்கும் கொடுக்க வேண்டும்.) 


_*வாடகை பெறப்படும் (கடை அல்லது வீடு போன்ற) சொத்துக்களுக்கு, வாடகைக்கு மட்டும் 

ஜகாத் கொடுத்தால் போதும். மொத்த மதிப்பிற்கு அல்ல!_


*குழந்தைகளின் நகைகளுக்கு கொடுக்க வேண்டுமா?*


குழந்தைகள் பருவமடைந்து அந்த சொத்துக்களை பயன்படுத்தும் வரை, அதன் உரிமை பெற்றோர்களை சார்ந்ததே. எனவே அதற்கும் கொடுக்க வேண்டும். 


*அனாதைகளின் சொத்துக்களுக்கு கொடுக்க வேண்டுமா?*

ஆம்... அவர்களை பராமரிப்பவர், அவர்களது சொத்திலிருந்தே கொடுக்கலாம்.


*தரிசு நிலத்திற்கு கொடுக்க வேண்டுமா?*


தரிசு நிலத்திற்கு ஜகாத் இல்லை. ஆனால் விற்பனை எண்ணத்துடன் வைத்திருக்கும் தரிசு நிலத்திற்கு ஜகாத் கொடுக்க வேண்டும். 


*விவசாய நிலத்திற்கு கொடுக்க வேண்டுமா?*


விவசாய நிலத்தில் வரும், விளைச்சலுக்கு மட்டும் ஜகாத் உண்டு!


*விவசாயத்திற்கு எவ்வளவு கொடுக்க வேண்டும்?*


எவ்வித உழைப்பும் இன்றி, மழை நீரால் மட்டுமே கிடைக்கப்பெறும் விளைச்சலுக்கு , 10 சதவிகிதம் கொடுக்க வேண்டும். 


நீர் இறைத்து கிடைக்கப்பெறும் விளைச்சலுக்கு , 5 சதவிகிதம் கொடுக்க வேண்டும். 


மழைநீர் மற்றும் இறைத்து செலவிடப்படும் நீர் போன்றவற்றால் கிடைக்கப்பெறும் விளைச்சலுக்கு , ஏழரை சதவிகிதம் கொடுக்க வேண்டும். 


*கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டுமா?*


39 கால்நடைகள் வரை கிடையாது. 

40 கால்நடைகள் இருந்தால் ஒன்று கொடுக்க வேண்டும். 120 க்கு மேல் இருந்தால் இரண்டு கொடுக்க வேண்டும். 200க்கு மேல் இருந்தால் 3 கொடுக்க வேண்டும். 300க்கு மேல் 4.... Etc., 


*எதன் மீது ஸகாத் கிடையாது?*


வசிக்கும் வீடு, பயன்படுத்தும்  பொருட்கள், வாகனம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மீது ஸகாத் கிடையாது. 


*கொடுத்த பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டுமா?* 


ஒரு ஹிஜ்ரி வருடம் பூர்த்தி ஆகும் அனைத்து பொருட்களுக்கும், ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுக்க வேண்டும். 


*ரமலான் மாதத்தில் தான் கொடுக்க வேண்டுமா?*


அவ்வாறில்லை. சொத்துக்கள் கிடைக்கப் பெற்று ஒரு ஹிஜ்ரி வருடம் பூர்த்தி ஆனால் ஜகாத் கொடுக்க வேண்டும். அது எந்த மாதம் ஆனாலும் சரியே. 

ஆனால் அவ்வாறு கணக்கிடுவது மிகுந்த சிரமம். 


எனவே உலகம் முழுவதும் ரமலான் மாதத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். இம்மாதம் நன்மைகளை பன்மடங்காக்கி தரும் மாதம் என்பதும், இம்மாதத்தை தேர்ந்தெடுத்ததற்கு ஓர் காரணம். 


*யாருக்கு கொடுக்க வேண்டும்?*


(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்.

(அல்குர்ஆன் : 9:60)


*உறவினர்களுக்கு கொடுக்கலாமா?*


கொடுக்கலாம். உறவினர்களுக்கு கொடுக்கும்போது, ஸக்காத் கடமையை நிறைவேற்றிய நன்மையும், உறவைப் பேணிய நன்மையும் இணைந்து கிடைக்கும். 


(ரத்த உறவு இல்லாதவர்களுக்கும் கிடைக்கும் வகையில், நமது ஸகாத்தை சில பகுதிகள் பகிர்ந்தளிப்பது ஏற்றமானதே!) 


*தாய் தந்தையருக்கு கொடுக்கலாமா?*


யாருக்கெல்லாம் நாம் செலவு செய்ய வேண்டிய கடமை உள்ளதோ அவர்களுக்கு

கண்டிப்பாக கொடுக்கக்கூடாது. 


தாய் தந்தை, அவர்களின் பெற்றோர், அவர்களின் பெற்றோர்... அதேபோல் பெற்றெடுத்த குழந்தை, பேரக் குழந்தை, அவர்கள் பெற்றெடுத்த குழந்தை என யாருக்கும் கொடுக்க கூடாது. 


மனைவிக்கு கொடுக்கக்கூடாது. ஆனால் மனைவி, கணவனுக்கு கொடுக்கலாம். 


(மகளும், பெற்றோருக்கு ஜகாத் நிதியை கொடுக்கக்கூடாது என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கருத்து.) 


*ஜகாத் நிதி என சொல்லாமல் கொடுக்கலாமா?*


ஜகாத் பெறுவதற்கு அவர் தகுதியானவர் தான் என கண்டிப்பாக தெரியும் பட்சத்தில்,  சொல்லாமல் கொடுக்கலாம். 


ஆனால் சிலரின் புறத்தோற்றம் பெறுவதற்கு தகுதியானவர் போல் தெரியலாம், ஆனால் அவரிடம் சொத்துக்கள் இருந்தால், தகுதியற்ற  ஒருவருக்கு, ஜகாத் அளித்தவரை போல் ஆவோம்.


(சொல்லிக் கொடுத்தால், இதனை தவிர்க்கலாம்)


*சொத்துக்கள் உண்டு... ஆனால் கஷ்டப்படுகிறார் அவருக்கு கொடுக்கலாமா?*


யார் ஜகாத் கொடுப்பதற்கு தகுதியானவரோ, அவர் அதைப் பெறுவதற்கு தகுதி இழந்து விடுகிறார்.


*ஜகாத் கடமை... ஆனால் கொடுப்பதற்கு வசதி இல்லை... என்ன செய்வது?*


நகை அல்லது ஏதேனும் பொருட்களை விற்று கொடுத்திட வேண்டும்.

தள்ளிப்போடுவதற்கு அனுமதி இல்லை...


*வாராக் கடன்களை (Bad Debts) கழித்து விடலாமா?*


ஜகாத் தொகையை பெற்றவர், அதனை விருப்பம்போல் செலவு செய்யலாம். ஆனால் வாராக் கடன்களை கழித்து விடும்போது, நமது கடனை மட்டுமே திருப்பிக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அதில் ஏற்பட்டுவிடுகிறது. எனவே அவ்வாறு கடன்களை கழித்து விடக்கூடாது. 


*வாராக்கடன்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுக்க வேண்டுமா?*


வருடங்கள் கடந்த வாராக்கடன் எனில், அதற்கு ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுக்கத் தேவையில்லை. அந்த கடன் எப்போது திரும்பப் பெறப்படுகிறதோ, அந்த நேரத்தில் ஜகாத்தை கொடுத்துவிட வேண்டும்.


வீடு, கடை வாடகை போன்றவற்றிற்கு முன்பணம் (Advance / Security Deposit) கொடுத்து வைத்திருந்தால் அதற்கும் இதே சட்டமே. 


*வியாபாரப் பொருட்களுக்கு ஜகாத் உண்டா?*


எவையெல்லாம் விற்பனைக்காக தயார் செய்யப்படுகிறதோ,  அதன் மீது ஜகாத் கடமையாகின்றது. 


ஆனால் கடையில் பயன்படுத்தப்படும் பொருட்களின் மீது, ஜகாத் கடமை இல்லை.


*வியாபார பங்குகள் (Shares) மீது ஜகாத் உண்டா?* 


ஆம்... ஆன்லைன் பங்குகள் மற்றும் ஸ்லீப்பிங் பார்ட்னர்ஸ் பங்குகள் மீதும் உண்டு. 


பேப்பர் கோல்டு,  இ-கோல்டு போன்றவற்றின் மீதும் உண்டு. 


*குறிப்பு*: _இவை அனைத்தும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் மற்றும் ஃபத்வாக்கள் அடிப்படையில் தொகுக்கப்பட்டது. எனினும் தங்கள் பகுதி மார்க்க அறிஞர்களிடம் கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ளவும்_

No comments:

Post a Comment