Friday 14 December 2018

பெற்றோரின் சிறப்பு!!!!

பெற்றோரின் சிறப்பு!!!!!




அல்லாஹ்வின், கட்டளைப்படி பெற்றோருக்கு எதிராக ‘சீ’ என்ற வார்த்தையைக் கூட பாவிக்கலாகாது. அந்தளவுக்கு இஸ்லாம் அவர்களை கெளரவப்படுத்தி இருக்கின்றது.
இது தொடர்பாக அல்லாஹுத்தஆலா தன் அருள் மறையில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றான்.

‘உம்முடைய இறைவன், அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மைசெய்ய வேண்டும் என்றும் விதித்து இருக்கின்றான். அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமையை அடைந்து விட்டால் அவர்களை (நோக்கி) ‘சீ’ என்றும் சொல்ல வேண்டாம். அவ்விருவரையும் (உம்மிடமிருந்து) விரட்டவும் வேண்டாம். இன்னும் அவ்விருவரிடமும் கண்ணியமான பேச்சையே பேசுவீராக.குர்ஆன் 17 : 23

‘இன்னும் இரக்கம் கொண்டு பணிவு எனும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும் என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது என்னைப் (பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல் நீயும் அவர்கள் இருவருக்கும் கிருபை செய்வாயாக! எனப் பிரார்த்திப்பீராக!(அல்-குர்ஆன் – 17 : 24)

இதேநேரம் இந்த இடத்தில் ஒவ்வொருவரும் ஒரு முக்கிய விடயத்தைக் கருத்தில்கொள்ள வேண்டும். அது தான் தம் பெற்றோருக்காக நன்மை செய்யுமாறு அல்-குர்ஆன் பல இடங்களில் வலியுறுத்தியுள்ள போதிலும், அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைக்குமாறு வற்புறுத்துவார்களாயின் அதனை ஏற்று நடக்கலாகாது என்பதாகும். இதனை அல்-குர்ஆன் ஸ¤ரா அன்கபூத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றது.

‘தம் தாய் தந்தையருக்கு நன்மை செய்யும் படியாக நாம் மனிதனுக்கு வலியுறுத்தி இருக்கின்றோம். எனினும் (மனிதனே) உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணையாக்கும்படி அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் நீர் அவ்விருவருக்கும் கீழ்ப்படிய வேண்டாம். என்னிடமே உங்கள் அனைவரின் மீளுதலும் இருக்கின்றது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அப்போது நான் உங்களுக்கு அறிவிப்பேன்குர்ஆன் 28 : 08


*பெற்றோரின் சிறப்பு*

மேலும் இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் பெற்றோரின் மகத்துவம் சிறப்பு, முக்கியத்துவம், அவர்களைப் பராமரிக்க வேண்டிய ஒழுங்குகள் என்பன தொடர்பாக பல சந்தர்ப்பங்களில் எடுத்துக் கூறியுள்ளார்கள்.

ஒருமுறை முஹம்மத் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மகிழ்ச்சி பெற்றோரின் மகிழ்ச்சியிலேயே உள்ளது. அல்லாஹ்வின் கோபம் பெற்றோரின் கோபத்திலேயே உள்ளது’என்று கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னு ஆஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (ஆதாரம் : திர்மிதி)

மற்றொரு சந்தர்ப்பத்தில் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் மனிதர் ஒருவர் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! பிள்ளைகள் மீது தாய் - தந்தையருக்குரிய உரிமைகள் என்ன? எனக்கேட்டார். அதற்கு முஹம்மத் (ஸல்) அவர்கள், ‘தாய் தந்தையரே உம்முடைய சுவனம் ஆவார்கள். அவர்களே உம்முடைய நரகமும் ஆவார்கள்’ என்று கூறியதாக அபூ உமாமா (ரலி) அறிவித்துள்ளார்கள். (ஆதாரம் : இப்னு மாஜா)

No comments:

Post a Comment